சட்டசபைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2021-05-02 02:30 GMT

தமிழகம் உள்பட ஐந்து மாநில  சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று பகல்  வாக்கில், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிய வரும்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்,  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அ.தி.மு.க.  - பாஜக, பாமக உள்ளிட்டவை ஒரு அணியாகவும், தி.மு.க. - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை மற்றொரு அணியாகவும் களமிறங்கின.

இதுதவிர, மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவியது. 

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியுள்ளது. முதலில், தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதேபோல்,  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,  யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்பது, இன்று பகலில் தெரியவரும்.
Tags:    

Similar News